வீழ்ச்சியின் திசையில் பாரம்பரிய தமிழ் செதுக்குப் பாரம்பரியம் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
Description
மரம், கல், உலோக வார்ப்பு வேலைகளை உள்ளடக்கிய பாரம்பரியத் தமிழ் செதுக்குப் பாரம்பரியம் பல நூற்றாண்டு கால வரலாற்றை உடையவொன்றாக இலங்கை உள்ளிட்ட தென்னிந்திய பண்பாட்டு வட்டகையின் பல்வேறுபட்ட பிராந்தியங்களிலும் வழங்கி வருகிறது. பொதுவாக விஸ்வகர்ம குலத்தினர் எனச் சிற்ப சாஸ்திர நூல்களால் இனங்காணப்படுகின்ற சமூகக் குழுவினர் இச் செதுக்குத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூரில் பஞ்சகம்மாளர் என அழைக்கப்படுகின்ற இவர்கள் வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு பட்டறைகளை அல்லது வெளிப்பாட்டுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களாக காணப்பட்டனர். ஒரு காலகட்டத்தில் இப் பட்டடைகளுக்கிடையே வெளிப்பாடு சார்ந்த திறமைப் போட்டிகளும் இப் பட்டடைகள் சார்ந்த சிறப்புத்தேர்ச்சிகளும் காணப்பட்டன. அச் சிறப்புத் தகுதிகளால் பெரியளவில் அவை அறியப்பட்டும் இருந்தன. இப் பட்டடைகள் உருவாக்கிய கோயில் வாகனங்கள், தேர்கள், கூடுகள், மஞ்சங்கள், விக்கிரங்கள் மற்றுமுள்ள செதுக்குகள் வழியாக ஒரு வலுவான தமிழ்க்காட்சிப் பண்பாட்டை அவை உற்பத்தி செய்தன. அதுமட்டுமின்றி அவை கல்லினதும், மரத்தினதும், உலோகத்தினதும் பௌதீக இயல்புகளைக் கடந்து அவற்றை ஊடறுத்து வாழும் உயிர்களுக்கு நிகரான படைப்புக்களை உருவாக்கின.